சென்னை :டிஎன்பிஎஸ்பி குரூப் 4 மற்றும் செயல் அலுவலர்களுக்கான (குரூப் 8) எழுத்து தேர்வுகள் நாளை நடைபெறுகிறது. 4,250 தேர்வு மையங்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 238 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அலுவலகங்களில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பதிவுத்துறை, வணிக வரித்துறை உள்பட பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரித்தண்டலர், ஸ்டெனோ கிராபர், நில அளவர், வரையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் (குரூப் 4 பணியிடங்கள்), இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் பதவிக்கும்(குரூப் 8) என 10 ஆயிரத்து 793 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இவற்றுக்கு 12 லட்சத்து 50 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 238 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு 244 இடங்களில் 4 ஆயிரத்து 250 மையங்களில் நாளை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகிய முகவரிகளில் தேர்வர்கள் டவுன்லோடு செய்து வருகின்றனர். தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் இதுவரை 10 லட்சம் பேர் வரை ஹால்டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தேர்வை கண்காணிக்கும் துணை ஆட்சியர் மற்றும் அதற்கு சமமான நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் மாவட்டந்தோறும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்வு அறைகளில் திடீர் ஆய்வு நடத்த உள்ளனர். இது தவிர கலெக்டர்கள், டிஆர்ஓ ஆகியோரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு நடக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேர்வு மைய நுழைவு வாயில் முதல் தேர்வு மையங்களில் உள் நடக்கும் நிகழ்வுக்குள், வினாத்தாள் பண்டல் பிரிப்பது, தேர்வு எழுதுவது போன்றவை கேமராவில் பதிவு செய்யப்படும். இவற்றை கலெக்டர் அலுவலங்கள் மற்றும் தேர்வாணைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.